தீவிரவாதிகளை அழிக்கும் திட்டத்தை வகுக்க அனைத்து கட்சி குழு அமைப்பு: நவாஸ் ஷெரிப்
இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இன்னும் ஒரு வாரத்தில் திட்டம் தயாராகிவிடும் என்று அறிவித்தார்.
பெஷாவர் தாக்குதலை தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு நவாஸ் அளித்த பேட்டி: பெஷாவரில் நடந்தது கோழைத்தனமான ஒரு தாக்குதல். தாலிபான்கள் என்றாலே கொடூரமானவர்கள்தான். அதில் நல்ல தாலிபான்கள், கெட்ட தாலிபான்கள் என்ற பாகுபாடு கிடையாது.
அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்த குழு தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து ஏழு நாட்களுக்குள் அரசுக்கு அளிக்கும்.
பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாதிகளை மட்டுமின்றி, எல்லையோர பகுதிகளிலுள்ள தீவிரவாதிகளையும் சேர்த்தே அழிக்க இந்த திட்டம் வகை செய்யப்போகிறது. இவ்வாறு ஷெரிப் தெரிவித்தார்.