அடங்க மறுக்கும் குழந்தைச்சாமி.. ஏவுகணை ஆய்வுதான் அமெரிக்காவுக்கான சுதந்திர தின பரிசு என நக்கல்!
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை ஆய்வு செய்த வடகொரியா அது அமெரிக்காவுக்கான பரிசு என நக்கலடித்துள்ளது.
பியாங்ஜியாங்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை ஆய்வு செய்த வடகொரியா அது அமெரிக்காவுக்கான பரிசு என நக்கலடித்துள்ளது. இந்த ஏவுகணைப் பரிசு, நிச்சயமாக அமெரிக்கர்களுக்கு சந்தோசத்தை கொடுத்திருக்காது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை நேற்று வடகொரியா சோதனை செய்தது.
வடகொரியாவுக்கு கண்டனம்
வடகொரியாவின் இந்த சோதனைக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவின் இந்த செயலைக் கண்டித்து ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு பரிசு
இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக்கூடிய இந்த ஏவுகணை பெரிய, கனமான அணு போராயுதம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த ஏவுகணை அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு வடகொரியா வழங்கும் பரிசு என்றும் அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
சந்தோஷத்தை கொடுக்காது
நேற்று அனுப்பப்பட்ட இந்த ஏவுகணைப் பரிசு, நிச்சயமாக அமெரிக்கர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கர்களின் அலுப்புக்கு மேலும் பரிசுகள் அனுப்பப்படும் என்றும் கிம் தெரிவித்தார்.
முறியடிக்க தயாராக இருக்கிறோம்
அதிபர் கிம்மின் இந்த பேச்சு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வடகொரியாவின் எந்த அச்சுறுத்தலையும் முறியடிக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.