வெளிநாட்டுப் பயணத்தில் ட்ரம்ப்… மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா!
பக்சங்(வட கொரியா): அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கும் போது, வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. 500 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்ற பிறகு இந்த ஏவுகணை கடலில் விழுந்துள்ளது
கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய இந்த ஏவுகணை வட கொரியாவின் பங்சங் பகுதியிலிருந்து அனுப்பப் பட்டதாக தென் கொரிய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய ராணுவம் வட கொரியாவின் எந்த சவாலையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் புதிய அதிபர் பதவியேற்ற பிறகு, வட கொரியாவின் இரண்டாவது ஏவுகணை சோதனையாகும்.
நடுத்தர வகையை சார்ந்த இந்த ஏவுகணை சோதனையை ஏற்கனவே பிப்ரவரி மாதம் வட கொரியா நடத்தியுள்ளது என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு குறைந்த பட்சம் 10 ஏவுகணை சோதனைகளையாவது வட கொரியா நடத்தியுள்ளது. இருந்தாலும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் -னுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது நானே நேரடியாக கிம் ஜான் உன் - ஐ சந்திக்க ஆவலாக உள்ளேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதற்கு, சரியான நிபந்தனைகளுடன் வந்தால் அதிபர் ட்ரம்ப் - ஐச் சந்திக்க தயார் என்று கிம் ஜாங் உன் -னும் பதிலளித்து இருந்தார்.
இருப்பினும், வட கொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வட கொரியாவின் ஏவுகணை சோதனை என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் வெளிநாட்டுப் பயணமாக சென்றிருக்கும் போது நடத்தப்பட்ட வட கொரிய சோதனை, அதிபரின் வெளிநாட்டுப் பயணத்தின் முக்கியத்துவத்தை திசை திருப்பும் நோக்கமாக இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.