ட்ரம்ப்பின் எச்சரிக்கையை மீறும் வட கொரியா.. அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கப் போவதாக கொக்கரிப்பு!
வாஷிங்டன்(யு.எஸ்): வட கொரியாவிடம், சிறிய அணு ஆயுதம் தயாராக உள்ளதாகவும் அதை ஏவுகணையில் பொருத்தி, ஏவக்கூடிய தொழில்நுட்பமும் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத் துறை எச்சரித்து இருந்தது.
ராணுவ தளவாட மற்றும் உளவுத் துறைத் தகவல்களின் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமில்லாமல் இது ஊகிக்கப்பட்டதாக தெரிகிறது. லீவில் இருக்கும் அதிபர் ட்ரம்புக்கு இந்த தகவல் தெரிவிக்கப் பட்டது.
அதைத் தொடர்ந்து, வட கொரியா அடங்கிப் போகாவிட்டால், ஒரேயடியாக அழித்து விடுவோம் என்ற தொனியில் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
போர் பதட்டம் உருவாகும் வகையில் ட்ரம்பின் அறிக்கை இருந்தது. ஏற்கனவே தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் அங்கு தயார் நிலையில் உள்ளன. ட்ரம்பின் அறிக்கை மேலும் பதட்டத்தை கூட்டியது.
எதற்கும் அசராத வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க எல்லைக்குட்பட்ட க்வாம் தீவை தாக்கப் போவதாக மிரட்டியுள்ளார். வட கொரியா ராணுவம், க்வாமில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து, வியூகம் வகுப்பதாக வட கொரிய செய்தி தெரிவிக்கிறது.
ட்ரம்பின் ஆவேசமான எச்சரிக்கைக்கு, உட்கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது. பாராளுமன்ற ராணுவ கமிட்டியின் தலைவர் ஜான் மெக்கய்ன், ட்ரம்ப் அறிவித்த மாதிரி எல்லாம் செயல்பட முடியாது. சபை ஒப்புதல் இல்லாமல் ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
ஜனநாயக் கட்சியினர், தேவையில்லாமல் ட்ரம்ப் பிரச்சனையை பெரிதாக்கியுள்ளார். வட கொரியாவை உசுப்பேத்தி விட்டுள்ளார் என்று சாடியுள்ளனர்.
எதையும் கண்டுக்காமல் வட கொரியாவின் அச்சுறுத்தல்களை ட்ரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார். லீவுலே இருந்தாலும் தீயா வேலை செய்யுறாரு ட்ரம்ப்!
- இர தினகர்