மேலதிருவேங்கடநாதபுரம்: இந்த ஊரின் பெயரை உச்சரிக்க படாதபாடுபட்ட நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகும் வாய்ப்பை இழந்த தமிழர் ஸ்ரீ ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தின் பெயரை உச்சரிக்க நியூயார்க் டைம்ஸ் சிரமப்பட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அண்டோனின் ஸ்கேலியா இறந்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய அமெரிக்கரான தமிழர் ஸ்ரீ ஸ்ரீனிவாசனை ஒபாமா நியமிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பை ஸ்ரீனிவாசன் இழந்தார்.
இந்நிலையில் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் பற்றி செய்தி வெளியிட நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அவரின் சொந்த ஊரான நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தின் பெயரை உச்சரிக்க படாதபாடு பட்டுள்ளது.
மேலதிருவேங்கடநாதபுரம் என்ற பெயரை உச்சரிக்க நியூயார்க் டைம்ஸ் அலுவலகத்தில் இருந்தவர்களால் முடியவில்லை. இருப்பினும் விடா முயற்சி செய்து திக்கி திணறி ஒரு வழியாக உச்சரித்துள்ளனர்.
நியூயார்க் டைம்ஸை சேர்ந்த தெற்காசிய பிரிவு தலைமை ஆசிரியர் எல்லன் பேரி மேலதிருவேங்கடநாதபுரத்திற்கே சென்று ஒருவரை அந்த ஊரின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளார். மேலதிருவேங்கடநாதபுரம் என்று இப்படி ஒரு பெரிய பெயரில் தமிழகத்தில் ஒரு ஊர் உள்ளது என்பதை நியூயார்க் டைம்ஸ் ஊழியர்களால் நம்பவே முடியவில்லை.