பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க ஒபாமா ஒப்புதல்!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் கியூபாவும் சுமார் அரை நூற்றாண்டுகாலமாக பகை நாடுகளாக இருந்து வந்தன. கியூபாவின் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு நூற்றுக்கணக்கான முறை அமெரிக்கா முயற்சித்தது.
கியூபா மீது எண்ணற்ற பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துப் பார்த்தது. ஆனால் கியூபா விஸ்வரூப வளர்ச்சியடைந்ததே தவிர வீழ்ந்துவிடவில்லை. பிடல் காஸ்ட்ரோ முதுமை காரணமாக அரசியலில் இருந்து விலக அவரது சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ அதிபரானார். இந்நிலையில் கியூபாவுடனான பகைமையை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா அதிபர் ஒபாமா முடிவு செய்தார்.
பகைமை முறிந்தது
இது தொடர்பாக கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவுடன் பல முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார் ஒபாமா. பின்னர் இதனை பகிரங்கமாகவும் அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான நட்புறவு துளிர்க்கத் தொடங்கியது.
ரவூல் காஸ்டோர்-ஒபாமா சந்திப்பு
இந்நிலையில் அண்மையில் பனாமாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்து கை குலுக்கி நட்பை வெளிப்படுத்தியிருந்தார் ஒபாமா. அம்மாநாட்டில் பங்கேற்க செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா விரைவில் நீக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஒபாமா ஒப்புதல்
இதனிடையே கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கலாம் என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியின் பரிந்துரைக்கு ஒபாமா நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது உடனே நடைமுறைக்கு வந்துவிடாது.
அடுத்தது என்ன?
ஒபாமாவின் ஒப்புதல் குறித்து 45 நாட்களில் அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவெடுத்து ஒப்புதல் தெரிவித்த பின்னரே நடைமுறைக்கு வரும். பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்பட்டால் அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகள் அடுத்தடுத்து விலக்கிக் கொள்ளப்படும். இருநாடுகளிடையேயான தூதரக உறவுகள் புதுப்பிக்கப்படும்.