கனடா பாராளுமன்றத்தில் மர்மநபர்கள் தாக்குதல்... ஒபாமா கண்டனம்
ஒட்டாவா: கனடா நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று கனடா நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மர்மநபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவரும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் ஒருவரும் பலியானார்கள். தாக்குதல் நடத்திய மற்றொரு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கனடா நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறில்லையில், ‘கனடா நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மர்மநபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக கனடா நாட்டிற்கு துணை நிற்போம்' என தெரிவித்துள்ளார்.