அமெரிக்காவுக்கே அதிபரா இருந்தாலும்.. மனைவி குறித்து பேசும் போது நா தழுதழுக்க கண்கலங்கிய ஒபாமா
அதிபர் ஒபாமா இன்று தனது இறுதி உரையின் போது அவரது மனைவி மிட்செல் குறித்து பேசினார். அப்போது அவர் கண்கலங்கினார்.
சிகாகோ: அதிபர் ஒபாமா இன்று நாட்டு மக்களுக்கு நன்றியுரையாற்றினார். அப்போது தனது மனைவி மிட்செல் குறித்து பேசிய அவர் கண்கலங்கி குரல் தழுதழுத்தார்.
அதிபர் ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 20 தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சிகாகோவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒபாமா தனது இறுதி உரையையாற்றினார்.
அப்போது தான் அதிபராக பதவி வகித்த கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்கா எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார். இறுதி உரையில் தனது மனைவி மிட்செல் குறித்து பேசிய ஒபாமா, மிட்செல் கடந்த 25 வருடங்களாக தனது குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் தனக்கு நல்ல மனைவியாக மட்டுமின்றி சிறந்த தோழியாகவும் இருந்ததாக கூறினார்.
அதிபருக்கான வெள்ளை மாளிகையை அனைவரும் வந்து செல்லும் மாளிகையாக மிட்செல் மாற்றியதாக கூறினார். பல நேரங்களில் தனக்கு உற்ற துணையாக பெரும் ஆதரவாகவும் தனது மனைவி இருந்ததாக ஒபாமா கூறினார்.
தன்னையும் தனது நாட்டையும் பெருமைபட வைத்துள்ளதாக மிட்செல்லை ஒபாமா புகழ்ந்தார். மேலும் வரும் தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த ரோல் மாடலாக இருப்பார் என்றும் புகழாரம் சூட்டினார்.மிட்செல் குறித்து பேசும் போது ஒபாமாவின் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது. ஒபாமா கண்ணீர் விடுவதை பார்த்த பார்வையாளர்களும் கண் கலங்கினர்.