கார் விபத்து வழக்கு: சிறையிலிருந்து தப்பிய கைதி 56 ஆண்டுக்குப் பின் கைது!
நியூயார்க்: அமெரிக்காவில் கார் விபத்து ஒன்றில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தப்பிய கைதி ஒருவரை 56 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓஹியோவைச் சேர்ந்தவர் பிராங்க் பிரஷ்வாட்டர்ஸ் (79). இவர் கடந்த 1957-ம் ஆண்டு காரில் சென்றபோது ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதினார். அதில் காயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக பிராங்க் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பிராங்கிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட பிராங்க், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். தொடர்ந்து அவரைப் போலீசார் தேடி வந்தனர்.
தப்பியோடிய பிராங்க் வேறு ஒரு புனைபெயரில் புளோரிடாவில் தங்கி இருந்தார். சுமார் 56 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், சமீபத்தில் புனை பெயரில் இருந்த பிராங்க் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிராங்கை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அவரது கைரேகை மற்றும் பழைய போட்டோக்களை வைத்து போலீசார் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் சிறையில் இருந்து தப்பி ஓடிய பிராங்க் தான் இவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பிராங்கை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.