பாகிஸ்தான் பெட்ரோல் டேங்கர் வெடித்த பயங்கர விபத்து...பலி எண்ணிக்கை 128 ஆனது
பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதால் பலியானோர் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று அதிகாலை கராச்சியிலிருந்து லாகூருக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஹவல்பூர் என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரியிலிருந்து பெட்ரோல் கசிந்தது. அதனைக் கண்ட அப்பகுதிவாசிகள், அதனைப் பிடிக்க கூட்டமாக சென்றனர்.
40000 லிட்டர் பெட்ரோலை ஏற்றியிருந்த அந்த லாரி திடீரென தீப்பற்றி, வெடிக்க ஆரம்பித்தது. இதில், கசிந்த பெட்ரோலை பிடிக்கச் சென்ற பொதுமக்கள் 128 பேர் சிக்கி உயிரை விட்டனர். இதில், ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.
இது மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள், 12 மோட்டார்சைக்கிள்களும் எரிந்து சேதமாகின. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ரம்ஜான் பண்டிகைக்கு ஒருநாளே உள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.