ஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் போதும்… அப்படியே ஜெயலலிதா மாதிரியே பேசும் டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆண்டுக்கு 1 டாலர் மட்டும சம்பளமாகப் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆண்டுக்கு 1 டாலர் மட்டும் ஊதியமாக பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். இவர் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அதிபராக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதன்முறையாக அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து நேர்காணல் வழங்கினார். அப்போது, அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஓராண்டிற்கு ஒரு டாலர் மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். அதிக சம்பளம் பெற்று உல்லாசமாக சுற்றுலா செல்ல தனக்கு நேரம் இல்லை என்றும், மக்களுக்காக முழு நேரம் உழைக்க போகிறேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க நாட்டு மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதால் விடுமுறை எடுக்காமல் பணி செய்ய போவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு ஆண்டுக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். இதுதவிர அதிபரின் அன்றாட செலவிற்கென 50 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும். இவை எதுவுமே வேண்டாம் என்று டொனால்ட் ட்ரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.
பெரிய அரசியல் பின்னணி இல்லாமல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப்பின் சொத்து மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவர் பெரிய ரியல் எஸ்டேட் வர்த்தகர். அவருடைய சொத்துக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. குறிப்பாக சவுதி போன்ற கிழக்காசிய நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஹாம்ஸையர் பகுதியில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊதியம் வாங்கப்போவதில்லை என்று ட்ரம்ப் அப்போதே அறிவித்திருந்தார்.
ஜெயலலிதா மாதிரியே
தமிழக முதல்வராக முதல் முறையாக (1991) ஜெயலலிதா பதவியேற்றபோதும் கூட இதே போலத்தான் செய்தார். அதாவது மாதம் 1 ரூபாய் மட்டும் சம்பளம் போதும் என்று அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார். ஆனால் மற்ற ஜெயலலிதா ஆட்சிகளைிகளை விட அவரது முதல் ஆட்சியில்தான், அதாவது மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கிய அந்த ஆட்சியில்தான் மிகப் பெரிய வரலாறு காணாத ஊழல் புகாரில் சிக்கி கடைசி வரை அது அவரை விடாமல் துரத்தி சிறை வரைக்கும் கொண்டு சென்றது என்பது நினைவிருக்கலாம்.