விமானம் வெடித்துச் சிதறியதில் ஒசாமா பின் லேடனின் சித்தி, சகோதரி, மைத்துனர் பலி
லண்டன்: இங்கிலாந்தில் சிறிய விமானம் ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மாற்றாந்தாய், சகோதரி உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மாற்றாந்தாய் ராஜா ஹாஷிம், அவரது சகோதரி சனா பின் லேடன், சனாவின் கணவர் ஜுஹைர் ஹாஷிம் ஆகியோர் ஃபெனம் 300 சிறிய விமானத்தில் இத்தாலியில் இருந்து இங்கிலாந்துக்கு வெள்ளிக்கிழமை சுற்றுலா கிளம்பினார்கள். விமானத்தை ஜோர்டானைச் சேர்ந்த விமானி இயக்கினார்.
விமானம் இங்கிலாந்தின் தென்பகுதியில் தரையிறங்குகையில் கார் ஏலம் விடப்படும் இடத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகி விழுந்து எரிந்து வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பலியாகினர்.
விமானம் மோதி ஏலம் விடப்படும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 கார்கள் எரிந்து நாசமாகின. ஒசாமா குடும்பத்தினர் மூன்று பேரும் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மறைவுக்கு சவுதி இளவரசர் முகமது பின் நவாப் அல் சவுத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள மிலன்-மால்பென்சா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் இங்கிலாந்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று தடுப்புவேலியைத் தாண்டி அருகில் இருந்த ஏலம் விடப்பட்டும் இடத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் மீது மோதி வெடித்துச் சிதறியது.