இதயம் வலியால் துடிக்கிறது.. பெஷாவர் தாக்குதல் குறித்து அல் கொய்தா
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் ஒன்றில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அல் கொய்தா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் தங்களது இதயம் வலியால் துடிப்பதாக அது கூறியுள்ளது.
கடந்த வாரம் பெஷாவர் ராணுவப் பள்ளியில் 6 தீவிரவாதிகள் உள்ளே புகுந்து நடத்தியதாக்குதலில் 132 மாணவ, மாணவியர் உள்பட 141 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ பாகிஸ்தான் எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிலையில் தெற்காசியாவுக்கான அல் கொய்தா பிரிவின் செய்தித் தொடர்பாளர் என்று கூறப்படும் ஒசாமா மெஹமூத் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், பெஷாவரம் சம்பவத்தால் எங்களது இதயங்கள் வலியால் துடிக்கின்றன, வெடித்துச் சிதறியுள்ளன. இந்த சம்பவம் எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
போராளிகள் பாதுகாப்புப் படையினரை மட்டுமே குறி வைத்துத் தாக்க வேண்டும். அப்பாவி மக்களை தாக்கக் கூடாது. பாகிஸ்தான் ராணுவத்தின் குற்றங்களும், கொடுமைகளும் எல்லை கடந்து விட்டன என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவின் அடிமையாக பாகிஸ்தான் ராணுவம் மாறியுள்ளது என்பதும் உண்மை. முஸ்லீம்களை அது இனப்படுகொலை செய்து வருகிறது என்பதும் உண்மை. அதேசமயம், அதற்காக அப்பாவி முஸ்லீம் மக்களை நாம் கொல்லக் கூடாது, பழிவாங்கக் கூடாது.
அல்லாவின் எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக நாம் ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். அமெரிக்காவின் அடி வருடிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். அவர்களின் அடிமை ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். ஆனால் அபபாவிக் குழந்தைகளுக்கு எதிராக அல்ல. பெண்களுக்கு எதிராக அல்ல, முஸ்லீம்களுக்கு எதிராக அல்ல என்று கூறியுள்ளார் இந்த மெஹமூத்.
கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த தெற்காசியப் பிரிவை அல் கொய்தா தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி தொடங்கினார். மியான்மர், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக இது தொடங்கப்பட்டது.