கொடுமை... போக்கோ ஹாரம் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பம்...!
லாகோஸ்: போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்பு பிடித்துச் சென்று அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை செக்ஸ் அடிமைகள் போல தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 700 பெண்களை தீவிரவாதிகளிடமிருந்து ராணுவம் மீட்டது. அவர்களில் பலரையும் பாழ்படுத்தி சிதைத்துள்ளனர் இந்த தீவிரவாதிகள்.
இதுகுறித்து ஐ நா. உணவுத் திட்ட நைஜீரிய செயல் இயக்குநர் பாபாடுன்டே ஓஷோடிமெஹின் லாகோஸில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டார்.
எச்ஐவி சோதனை
அவர் கூறுகையில், ஏற்கனவே இப்பெண்களுக்கு எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 214 பேர் கர்ப்பினிகளாக உள்ளனர். சிலருக்கு கரு நல்ல வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. சிலர் தற்போதுதான் கர்ப்பமுற்றுள்ளனர்.
பிறந்த குழந்தைகள்
அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில குழந்தைகளையும் மீட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதியில் பிறந்தவர்கள் ஆவர். இப்போதுதான் அவர்கள் வெளி உலகையே பார்க்கிறார்கள்.
மன நல ஆலோசனை
மீட்கப்பட்ட அனைவருக்கும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிரவாதிகளிடம் மிகக் கொடுமையான சித்திரவதையை அனுபவித்துள்ளனர். அவர்களுக்குத்தான் நீண்ட கால மன நல ஆலோசனை தேவைப்படுகிறது.
16,000 பேருக்கு ஐ.நா. உதவி
கடந்த 2014ம் ஆண்டு 16,000 கர்ப்பிணிப் பெண்கள் முகாம்களில் குழந்தைப் பேறை அடைந்தனர். அவர்களுக்கு ஐ.நா. உணவுத் திட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது என்றார் அவர்.
ஒரே நாளில் 234 பேர் மீட்பு
வெள்ளிக்கிழமையன்று நைஜீரிய ராணுவம் 234 பெண்களையும், சிறுமிகளையும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டது. சம்பிசா வனப்பகுதியில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 214 பேர்தான் தற்போது கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2002 முதல் அட்டகாசம்
2002ம் ஆண்டு நிறுவப்பட்ட போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் போர் தொடுத்து வருகிறது. பெண்கள் படிக்கக் கூடாது என்று இது தடை விதித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு சிபோக் என்ற கிராமத்திலிருந்து 200 பள்ளிச் சிறுமிகளை இது கடத்திச் சென்றது உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுவரை 13,000 பேர் பலி
இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரிய ராணுவம் தீவிர நடவடிக்கையில் குதித்தது. கடந்த 6 ஆண்டுகளில் 13,000 பேரை இந்தத் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். ஆண்களைக் கொல்லும் இவர்கள் பெண்களை செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பு
நைஜீரியாவில் தனி இஸ்லாமியக் குடியரசை நிறுவ முயன்று வரும் இந்த அமைப்பு பலரை கூட்டம் கூட்டமாக கொன்றுள்ளது. கடத்தல்கள், தாக்குதல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றனர்.
ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு
சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்த ஹோக்கோ ஹாரம் தீவிரவாதிகள், தங்களது பெயரையும் இஸ்லாமிய மேற்கு ஆப்பிரிக்க மாகாண குடியரசு என்று மாற்றிக் கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.