ஆம்ஸ்ட்ராங்கின் பழைய "காலடி"யின் புதிய படங்களை வெளியிட்ட நாசா
வாஷிங்டன்: நிலவில் மனிதன் முதன்முறையாக தரையிறங்கியபோது எடுக்கப்பட்ட சுமார் 8400 புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து நாசா வெளியிட்டுள்ளது.
நிலவில் மனிதன் காலெடுத்து வைத்து பல வருடங்களாகி விட்டது. இன்னுிம் கூட அதே பிரமிப்பில்தான் உலகம் உள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அதுதான் நிலவில் போய் மனிதன் முதல் முறையாக இறங்கிய தருணமாகும்.
நீல் ஆம்ஸ்டிராங்...
அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதல் காலடியை எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் கால் பதித்தார்.
உடையில் கேமராக்கள்...
இந்த இரண்டு விண்வெளி வீரர்களும் நிலாவில் சுமார் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் நடந்தனர். அப்போது அவர்களது உடைகளிலும் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்தன.
பரவசமான சம்பவம்...
இந்தப் படங்கள் உலகையே பரவசத்திற்குள்ளாக்கின. பூமியைத் தாண்டி இன்னொரு இடத்தில் மனிதன் காலடி எடுத்து வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது அப்போது.
புகைப்படங்கள்...
கடந்த 2004ம் ஆண்டு அந்த புகைப்படங்களை நாசா அதிநவீன முறையில் டிஜிட்டல்மயமாக்கும் பணிகளைத் தொடங்கியது நாசா. தற்போது அந்த 8400 புகைப்படங்களை இணையத்தில் நாசா வெளியிட்டுள்ளது.
டிஜிட்டலுக்கு மாறின...
இந்தப் புகைப்படங்கள் இப்போது பளிச்சென காட்சி தருகின்றன. மீண்டும் நிலவுக்குப் போய் வந்த மகிழ்ச்சியை மனிதர்கள் அனுபவிக்கும் வழியைக் காட்டியுள்ளது இந்தப் புகைப்படங்கள்.
அந்தநாள் ஞாபகம்...
முன்பு பார்த்த படங்களை விட இவை மேலும் பொலிவுடன் ஜோராக காட்சி தருகின்றன. நிலவில் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் நடந்தது. அவர்கள் அங்கு மேற்கொண்ட வேலைகள் என அனைத்தையும் மீண்டும் நினைவு கூறுகின்றன இவை.
வித்தியாசமான படங்கள்...
நிலவில் விண்வெளி வீரர்கள் இறங்கியது மட்டுமல்லாமல் நிலவிலிருந்து பார்க்கும்போது பூமியின் தோற்றம், அப்பல்லோ விண்கலங்கள் தரையிறங்குவது என விதம் விதமான கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்களையும் நாசா இப்போது வெளியிட்டுள்ளது.
நாசா "வெளியிடாத" பல தகவல்கள் இன்னும் எக்கச்சக்கமாகவே உள்ளன.. அவையும் வெளி வந்தால் நன்றாக இருக்கும்.