நேபாளத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.320, பிஸ்கட் பாக்கெட் ரூ.450: நாடு திரும்பிய இந்தியர்கள் தகவல்
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் ஒரு பாட்டில் தண்ணீருக்கு ரூ.320 கொடுத்ததாக அங்கிருந்து நாடு திரும்பியுள்ள இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அவர்களில் பலர் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் பத்திரமாக நாடு திரும்பி வருகின்றனர்.
அப்படி நிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாளத்தில் இருந்து நேற்று நாடு திரும்பிய குஜராத்தைச் சேர்ந்த டூர் மேனேஜர் பார்கவ் த்ரிவேதி கூறுகையில்,
நிலநடுக்கம்
2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்று இருந்தது. நாங்கள் போக்கரா பள்ளத்தாக்கில் உள்ள மனகமனா தேவி கோவிலுக்கு செல்ல டிக்கெட் வாங்கினோம். அப்போது தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. நாங்கள் 82 பேர் ஒரு பூங்காவில் தஞ்சம் அடைந்தோம். இடிபாடுகளில் சிக்கி மக்கள் கை, கால்களை இழந்ததை பார்த்தோம்.
தூக்கம்
நாங்கள் ஹோட்டலுக்கு சென்று அன்றைய இரவை பேருந்தில் கழித்தோம். நாடு திரும்பலாம் என்று விமான நிலையத்திற்கு வந்தால் அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த நேபாள போலீசார் தடியடி நடத்தினர். முன்னாள் பாஜக எம்.பி. ஹரின் பதக்கிற்கு போன் செய்து நிலைமையை தெரிவித்தோம். அவரின் உதவியாலேயே நாங்கள் நாடு திரும்பியுள்ளோம்.
தண்ணீர்
நாங்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சரியாக சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் குடிக்கவில்லை. காத்மாண்டுவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் ஒரு பாட்டில் தண்ணீருக்கு ரூ.320 கொடுத்தோம் என்றார் பார்கவ்.
பிஸ்கட் பாக்கெட்
நிலநடுக்கம் ஏற்பட்டபோது பசுபதிநாதர் கோவிலுக்குள் இருந்த குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த அருணாபென் தாக்கர்(64) கூறுகையில், நாங்கள் கோவிலுக்குள் இருக்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுவர்கள் இடிந்தன. இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்தோம். ஒரு வழியாக விமான நிலையத்திற்கு வந்தபோது ஒரு பாட்டில் தண்ணீருக்கு ரூ.250 முதல் 300ம், பிஸ்கட் பாக்கெட்டுக்கு ரூ.450ம் கொடுத்தோம் என்றார்.