பாகிஸ்தான் ஜனாதிபதி மன்மோகன் சிங்காம்.. "இன்விடேஷனில்" குளறுபடி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விழா ஒன்றில் அழைப்பிதழில் அந்நாட்டு ஜனாதிபதி பெயருக்குப் பதிலாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெற்றிருந்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தில் வரும் 28ம் தேதி உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு அந்நாட்டு ஜனாதிபதி மம்னுன் உசேன் தலைமை தாங்க உள்ளார்.
இந்த விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னுன் பெயருக்கு பதிலாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தவறுதலாக அச்சிடப் பட்டு விட்டது.
இந்தத் தவறை அதிகாரிகள் கண்டறியும் முன்னரே சில அழைப்பிதழ்கள் முக்கிய உயர் அதிகாரிகளுக்கும், பிரமுகர்களுக்கும் அனுப்பப் பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், நடந்த தவறைக் கண்டறிந்த அதிகாரிகள் உடனடியாக மன்மோகன் சிங் பெயரை நீக்கி விட்டு மம்னுன் பெயரை அச்சிட்டுள்ளனர்.