உலகிலேயே ரொம்பப் "பயங்கரமான" நாடு எது தெரியுமா... ?
இஸ்லாமாபாத்: உலகிலேயே மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது இந்தியாவின் பக்கத்து நாடான பாகிஸ்தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல்சென்டர் என்ற அமைப்பு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தரும் அமைப்பாகும் இது.
இந்த நிறுவனத்தின் பட்டியலின்படி முதலிடத்தில் ஈராக் உள்ளது. ஈராக்கின் பல பகுதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தெற்காசிய நாடுகள் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஆகும். பாகிஸ்தான் 8வது இடத்தில் இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் 4வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 நாட்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள், கொலைகள், குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
முதல் 10 இடங்களில் நைஜீரியா, சோமாலியா, ஏமன், சிரியா, லிபியா, எகிப்து, கென்யா ஆகியவையும் இடம்பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் கிட்டத்தட்ட 45 நாடுகள், மிகவும் பயங்கரமான நாடுகளாக குறிக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமான ஒன்றாகும்.