பாக். விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பொதுமக்கள் உட்பட 17 பேர் சாவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரிலுள்ள அந்த நாட்டு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பொதுமக்கள் 16 பேரும், ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் திருப்பி தாக்குதல் நடத்தியதில் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெஷாவர் நகரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ளது விமானப்படை தளம். இன்று காலை 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டபடி, பெஷாவர் விமான தளத்தை நோக்கி முன்னேறியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.
சில மணி நேரங்கள் நீடித்த துப்பாக்கி சண்டையில் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் எவரேனும் தப்பியோடிவிட்டனரா என்பதை அறிந்துகொள்ள ராணுவம் தீவிர சோதனைகள் நடத்தி வருகிறது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மசூதியில் தொழுகை முடித்து திரும்பிய 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளார். மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு 'பாகிஸ்தானி தாலிபான்' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. மேலும் தங்கள் தரப்பில் ஒருவர் மட்டுமே இறந்ததாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
கராச்சி கடற்படை தளம் மீதான தாக்குதல், பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் 132 பேர் உட்பட 148 பேர் படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களை தொடர்ந்து நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தீவிரவாதத்தை பாகிஸ்தானில் இருந்து விரட்டியடிப்போம் என்று பாகி்ஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.