இந்திய டிவி சேனல்கள், சினிமாக்கள் அனைத்துக்கும் பாகிஸ்தானில் தடை!!
இஸ்லாமாபாத்: இந்திய டிவி சேனல்கள் மற்றும் சினிமாக்கள் அனைத்துக்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ய நேரிட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
போர் மேகம்..
இதையடுத்து இருநாட்டு எல்லைகளிலும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எல்லையோர மக்கள் பல லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ராணுவம் பதிலடி
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
சேனல்களுக்கு தடை
இதனிடையே பாகிஸ்தானில் அனைத்து இந்திய டிவி சேனல்கள், சினிமாக்களுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இருநாடுகளிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடையை விதித்துள்ளது.
சினிமாக்களுக்கும் தடை
இத்தடையை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய சினிமாக்களுக்கும் பாகிஸ்தானில் முழு அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.