புனித ரமலான் மாதத்தையொட்டி பாகிஸ்தானில் களை கட்டும் ‘முட்டை’ உடைக்கும் போட்டி!
இஸ்லாமாபாத்: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் ‘முட்டை' உடைக்கும் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ரம்ஜான் மாதத்தை ஒட்டி பழைய முட்டைச் சண்டையை இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதன்படி, நன்கு வேகவைத்த தங்களது முட்டைகளைக் கொண்டு எதிராளியின் முட்டைகளை உடைக்க வேண்டும். இது காலங்காலமாக பாகிஸ்தானில் விளையாடப் படும் ஒரு வகை போட்டி ஆகும்.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு இருந்து வரும் இஸ்லாமியர்கள், இரவு நேரத்தில் இந்த விளையாட்டை மிகவும் ஆர்வமாக விளையாடி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆசாத் அலி என்ற இளைஞர் கூறுகையில், ‘மற்ற விளையாட்டுகளை விட இந்த முட்டை உடைக்கும் விளையாட்டில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்' எனக் கூறுகிறார்.
இந்த விளையாட்டின் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. நம் கையில் இருக்கும் வேகவைத்த முட்டையால் எதிராளியின் வேக வைத்த முட்டையைத் தாக்க வேண்டும். இதில் எதிராளியின் முட்டை உடைய வேண்டுமே தவிர நமது முட்டை உடைந்து விடக்கூடாது.
இவ்வாறு கடைசி வரை தனது முட்டையை உடையாமல் பாதுகாப்பவர் போட்டியில் வென்றவர் ஆவார்.