ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடமா... ஒபாமா ஆதரவுக்கு பாக். எதிர்ப்பு
இஸ்லாமாபாத்: ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்ற அதிபர் ஒபாமாவின் அறிவிப்பிற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிஷலுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஒபாமா, டெல்லி சிரிகோட்டை அரங்கில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, ‘ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்' எனத் தெரிவித்தார்.
ஒபாமாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு இப்படி ஒரு ஆதரவு அளித்தால் அது தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் சீர் குலைக்கும் என பாகிஸ்தான் கருத்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, ‘‘இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்க கூடாது'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 48 உறுப்பினர்களைக் கொண்ட அணு எரிபொருள் சப்ளையர் குழுவிலும் சேர இந்தியா முயல்கிறது. இதுவும் நியாயமானதல்ல.
இந்தியா - அமெரிக்கா இடையிலான சிவில் அணு சக்தி ஒப்பந்தம் இப்பிராந்தியத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கவே வழிவகுக்கும். ஸ்திரத்தன்மை குலையும். அரசியல், பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்' எனத் தெரிவித்தார்.