காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் அமைதி ஏற்படாது: ஐ.நா. சபையில் நவாஸ் ஷெரீப் பேச்சு
நியூயார்க்: காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படமால் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா. சபை தொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.,பொது சபையின் 71-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், சிரியா உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம், சர்வதேச தீவிரவாதம், அகதிகள் விவகாரம், கொரிய தீபகற்ப பதற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
உலக நாடுகளின் தலைவர்கள் பொது சபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். அதன்படி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா.,பொது சபை கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு பேசியதாவது: தீவிரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தானும் போரிட்டு தான் வருகிறது. பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் சகிப்பின்மை எனும் சாத்தான், இனவெறி மற்றும் இஸ்லாமியத்தை எதிர்த்து புத்துயிர் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு படைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்காக பல்வேறு உச்சங்களுக்கு பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி, காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் ஏற்படாது. காஷ்மீரில் இந்தியாவின் அட்டூழியங்களை அடங்கிய கோப்புத் தொகுப்பை ஐ.நா.,-விடம் பாகிஸ்தான் வழங்கும்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி எனும் இளம் தலைவர் இந்தியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாக ஏற்றுக் கொள்ள முடியாத முன் நிபந்தனைகளை இந்தியா விதிக்கிறது. பேச்சுவார்த்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக இல்லை.
காஷ்மீரில் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேசமயம், அங்கு விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.