ஹலோ.. ஒபாமாவா? வர்ரதுதான் வாரீங்க, இந்த இந்தியாவ கொஞ்சம் தட்டி கேளுங்க: நவாஸ் ஷெரிப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய சுற்றுப்பயணம் குறித்து தகவலை தெரிவித்ததாகவும் விரைவில் பாகிஸ்தானிலும் சுற்றுப்பயணம் செய்வதாக உறுதியளித்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சம்மதித்துள்ளார். அதே நேரம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்லப்போவதில்லை என்று தெரிகிறது. இதனால் சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானின் மதிப்பு பாதிக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருதுகிறார்.
இதை சமாளிக்க ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒபாமா இந்தியா வரும் தகவல் நேற்று வெளியான நிலையில் அவசரமாக இந்த அறிக்கையை ஷெரிப் ஆபீஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது வரும் ஜனவரியில் இந்திய குடியரசு தின விழாவில் தலமை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய செல்லவிருப்பதை ஷெரீப்பிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வாஷிங்டன் சென்றிருந்த போது பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருந்ததை நினைவுகூர்ந்த நவாஷ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக ஒபாமாவிடம் தெரிவித்தார். நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன் விரைவில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் ஒபாமா, நவாஷ் ஷெரீப்பிடம் உறுதி அளித்தார்.
இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படும் நோக்கத்தில், இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவுக்கு தான் சென்றதாக ஒபாமாவிடம் கூறிய நவாஷ் ஷெரீப், வெளிநாட்டு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை ரத்து செய்வது, எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது போன்ற துரதிருஷ்டவசமான செயல்களில் இந்தியா ஈடுபடுவதாகவும், பாகிஸ்தானுடன் நட்புறவை வைத்துக்கொள்ள இந்தியா தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும், அதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு இந்தியாவிடம்தான் உள்ளது என்றும் நவாஷ் ஷெரீப் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒபாமா சுற்றுப் பயணம் செய்யும்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசுமாறும் நவாஸ் ஷெரிப் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.