For Daily Alerts
Just In
போர்க்களமாகிய பாகிஸ்தான்!! இஸ்லாமாபாத்தை தொடர்ந்து கராச்சி, லாகூருக்கும் பரவியது கலவரம்!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் கலவரம் லாகூர், கராச்சி ஆகிய நகரங்களுக்கும் பரவுவதால் அந்நாடே போர்க்களமாகிவிட்டது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆனால் நவாஸ் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்தே ஆட்சியைக் கைப்பற்றினார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, மதகுரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி போர்க்கொடி தூக்கின.
இதன் பின்னர் பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் இந்த இரு கட்சியினரும் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
- இஸ்லாமாபாத் வரும் வழியில் பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான்கான் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கான் உயிர் தப்பினார்.
- மொத்தம் 35 மணி நேரத்தில் 300 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து ஆகஸ்ட் 16-ந் தேதி காலை தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்தனர் கிளர்ச்சியாளர்கள்.
- மேலும் கராச்சி நகரில் இருந்து தாஹிர் உல் காத்ரி தலைமையிலான பேரணியும் இஸ்லாமாபாத்தை சென்றடைந்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது.
- ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தில் ஒன்று திரண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தினர்.
- ஒருகட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை ராணுவம் விரட்டியடித்தது.
- இப்படி போராட்டம் மெல்ல மெல்ல வெடித்த போதும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார்.
- கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை நவாஸ் ஷெரீப் அமைத்தார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
- தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இம்ரான்கான் கட்சி எம்.பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
- பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக தொடர்ந்தும் கிளர்ச்சியாளர்களால் கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் நவாஸ் ஷெரீப் பதவி விலகவில்லை.
- இந்த நிலையில் திடீரென நவாஸ் ஷெரீப் நேற்று தனது சொந்த ஊரான லாகூருக்கு சென்றதால் பதவியிலிருந்து விலகி தப்பி ஓடிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை மீண்டும் இஸ்லாமாபாத் வந்து அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தினார் நவாஸ் ஷெரீப்.
- நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டை பல்லாயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் வெடிக்க 3 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
- கிளர்ச்சியாளர்களில் ஒரு குழுவினர் பாகிஸ்தான் அரசு நடத்தும் பி டிவி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினர். இதனால் பி டிவி தனது ஒளிபரப்பை நிறுத்தியது.
- அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களில் மற்றொரு குழுவினர் நாடாளுமன்றத்தை மீண்டும் முற்றுகையிட்டு அமைச்சர்களைத் தடுத்து வருகின்றனர்.
- இஸ்லாமாபாத்தைத் தொடர்ந்து லாகூர் அருகே சியால்கோட்டில் ராணுவ அமைச்சர் வீடும் முற்றுகையிடப்பட்டது. இதேபோல் கராச்சி நகரிலும் கலவரம் வெடித்தது.
- தற்போது பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தும் போர்க்களமாகிப் போயுள்ளன.
- அதே நேரத்தில் ராணுவம் இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதில் தயங்கி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று ராணுவம் கூறுகிறது. ஜனநாயக வழியில்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ராணுவம் கூறி வருகிறது.
- தற்போதைய சூழலில் நவாஸ் ஷெரீப் பதவி விலகினால்தான் பிரச்சனை ஓயும் என்ற கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
Comments
English summary
Clashes between opposition activists and Pakistan's police intensified in Islamabad, Pakistan's capital on Sunday, casting an increasing shadow over the embattled government of Nawaz Sharif, the prime minister of the nuclear armed south Asian country.
Story first published: Monday, September 1, 2014, 13:34 [IST]