மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு பாக். நீதிமன்றம் ஜாமீன்! அதிர்ச்சியில் இந்தியா
இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஷகி உர் ரகுமான் லக்விக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்கப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் கூறிய மறுநாளே தீவிரவாதி ஒருவன் ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரமாக நடமாட ஆரம்பித்துள்ளான். இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
2008ம் ஆண்டு மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் போனஅறவற்றில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொன்று குவித்து மும்பை பூமியை ரத்தக்கறையாக்கியது லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு. அதன் தலைவன் ஹபீஸ் சையது மற்றும் அவனுக்கு அடுத்த இடத்திலுள்ள ஜகி உர் ரகுமான் லக்வி ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர்.
இதில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த லக்விக்கு இன்று ஜாமீன் வழங்கி தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை வழக்கு தொடர்பாக லக்வி உள்ளிட்ட 7 பேரை பாகிஸ்தான் கைது செய்து ராவல்பிண்டி சிறையில் அடைத்திருந்தது. இந்நிலையில் நேற்று ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த லக்விக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தளவில் லஷ்கர் தீவிரவாத இயக்கம் அதன் மற்றொரு ராணுவ படை போன்றதுதான். இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தால் செய்ய முடியாததை லஷ்கரை வைத்து முடித்துக்கொள்வது பாகிஸ்தான் வழக்கம். தெரிக் ஐ தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையிலும் ராணுவத்துடன், லஷ்கர் தீவிரவாதிகளும் கைகோர்த்துள்ளனர். எனவே லக்வி வெளியே வந்துள்ளது பாகிஸ்தான் ராணுவத்துக்கு பலம் சேர்க்கத்தான் என்று கூறப்படுகிறது.
அதே நேரம் இந்தியாவுக்கு எதிராக லக்வி செயல்பட வாய்ப்புள்ளதாக இந்திய தரப்பில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.