ஏமனுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து பரிசீலனை... பாகிஸ்தான் தகவல்
இஸ்லாமாபாத்: உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமன் நாட்டுக்கு தங்களது ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக சவுதி அரேபியாவின் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அரேபிய நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடான ஏமனில் தற்போது உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹவுதி எனப்படும் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள், அரசிற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுதி அரேபியா போரில் ஈடுபட்டுள்ளது. முதலில் வான்வழித் தாக்குதலை தொடங்கிய சவுதி அரேபியா, தனது தரைப்படையையும் போரில் ஈடுபடுத்தியுள்ளது.
இதற்கென் 100 போர் விமானங்கள், 1.5 லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்கள் மற்றும் விமானப்படையை சவுதி அரேபியா ஏமனுக்கு அனுப்பி உள்ளதாக அல் அரேபியா செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் போரில் சவுதி தலைமையில் எகிப்து, மொராக்கோ, ஜோர்டான், சூடான், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட 8 அரபு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஏமனுக்கு ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக சவுதி அரேபியாவின் கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தஸினிம் அஸ்லாம் கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா எங்களிடம் பேசிஉள்ளது. சவுதி அரேபியாவின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.