இஸ்லாமாபாத்தில் 300 தீவிரவாதிகளை வளைத்துப் பிடித்தது ராணுவம்
இஸ்லாமாபாத்: பெஷாவர் சம்பவத்திற்குப் பின்னர் தீவிரவாதிகள் மீது இறுக்கமான நடவடிக்கையை எடுத்து வரும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்களில் பலர் வெளிநாட்டவர்கள் என்று கூற்படுகிறது. இஸ்லாமாபாத் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தீவிரவாத வேட்டையை பாகிஸ்தான் படையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இஸ்லாமாபத்தில் மோப்ப நாய்கள், துப்பாக்கிப் போலீஸார், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள், கமாண்டோக்கள் சகிதம் பாதுகாப்புப் படையினர் வேட்டையில் இறங்கினர்.
பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ், டெரிட்டோரியல் போலீஸ், உளவுத்துறையினர் இதில் இடம் பெற்றிருந்தனர். இந்த சோதனையில் ஏராளமான வெடிகுண்டுகள், ஆயுதங்களும் சிக்கியதாம்.
ஆப்கான் அகதிகள் முகாம்கள், பஸ் நிலையங்கள், அரைகுறையாக கட்டி பாதியில் நிற்கும் கட்டடங்கள் ஆகியவற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மேலும் வான் மூலமாகவும் தலைநகரை பாகிஸ்தான் ராணுவம் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாம். இதற்குத் தேவையான ஸ்கை கேம்களை வாங்க அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாம்.