ஆகஸ்ட் மாதத்திலேயே பெஷாவர் தாக்குதல் பற்றி அரசை எச்சரித்த தீவிரவாத தடுப்பு மையம்
பெஷாவர்: ராணுவ வீரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தானின் கைபர்-படுன்க்வா மாகாண அரசு துறைகளுக்கு ஆகஸ்ட் மாதமே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர்-படுன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியை தாலிபான் தீவிரவாதிகள் கடந்த 16ம் தேதி தாக்கியதில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாகினர். மேலும் 122 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை பழிவாங்க அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியை தாக்கக்கூடும் என்று தேசிய தீவிரவாத தடுப்பு மையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கைபர்- படுன்க்வா மாகாண முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறைக்கு எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்த எச்சரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஒராகாசி பகுதி தாலிபான் தலைவர் காக்சார், பிலால் மற்று உபைதுல்லா ஆகிய 2 தீவிரவாதிகளுடன் சேர்ந்து கல்வி மையங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாதிகள் பெஷாவர் பள்ளியை தாக்கிய பிறகு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நீக்கினார். இதையடுத்து 6 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் பல தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.