உள்ளே வரக் கூடாது...இம்ரானை பெஷாவர் பள்ளியில் நுழைய விடாமல் தடுத்து பெற்றோர்கள் போராட்டம்
இஸ்லமாபாத் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளான பெஷாவர் பள்ளிக்குள் நுழைய முயன்ற இம்ரான்கானை, அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளிக் கூடத்தில் கடந்த மாதம் தாலீபன் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில், 132 மாணவர்கள் உட்பட 150 பேர் பரிதாபமாக பலியாயினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இதையடுத்து காலவரையின்றி மூடப்பட்ட அப்பள்ளி நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப் பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மற்ற மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பள்ளிக்கூடத்தின் உள்ளும், வெளியேயும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று அப்பள்ளிக்கூடத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெக்ரிக் - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் பலத்த பாதுகாப்புடன் வந்தார். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்க மாணவர்களின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. கைகளில் பதாகைகள் ஏந்தியடி, ‘இம்ரான்கானே திரும்பிப் போ' என கோஷங்கள் எழுப்பியபடி இம்ரான்கானின் வாகனங்களை பள்ளிக்குள் நுழைய விடாமல் அவர்கள் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இம்ரான்கானை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்ததற்கான காரணம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ‘இந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு மாகாண அரசு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆன நிலையில்தான் இம்ரான்கானுக்கு இங்கே வர முடிந்திருக்கிறது. அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதை வைத்து அவர் அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. மேலும் நாங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்கியிருந்த சமயத்தில் ரகசியத் திருமணம் செய்த சுயநலவாதி அவர் என்றார்கள்.