பை நிறைய கத்தியோடு ‘பறந்த’ பைலட் கைது.. இங்கிலாந்தில்!
லண்டன்: இங்கிலாந்தில் பையில் நிறைய கத்திகளுடன் விமானத்தை இயக்கிய பைலட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் ஜெர்மனி விமானம் ஒன்று 150 பயணிகளோடு ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானியே இந்த விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகளை மட்டுமல்லாது விமானிகளையும் இங்கிலாந்து தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் போயிங் 777 ரக விமானம் ஒன்று 260 பயணிகளுடன் தரை இறங்கியது. அதைத் தொடர்ந்து விமான ஊழியர்களின் உடைமைகளை ஸ்காட்லாந்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த விமானத்தின் 61 வயது விமானி ஒருவரது கைப் பையில் ஏராளமான கத்திகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து விமானி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்டார்.
பையில் கத்தி வைத்திருந்ததற்கான காரணம் குறித்து விமானியிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ஹீத்ரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.