வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுக: துபாய் இலங்கை துணை தூதர்
துபாய்: இலங்கையில் பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு துபாய் இலங்கை துணைத் தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் பெருமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும், அந்த நாட்டில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வந்த கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 92-ஆக உயர்ந்துள்ளது. ராணுவம் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டு காலம் கடந்து வருவதால், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் கிடைத்த பொருள்களைக் கொண்டும், வெறும் கைகளைக் கொண்டும் மீட்புக் குழுவினர் சகதிச் சரிவுகளை அள்ளி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதர் சரிதா யத்தகோடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். துபாய் சத்வா பகுதியில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் பணமாகவோ, பொருளுதவியாகவோ அல்லது எமர்ஜென்சி விளக்குகள், மடிக்கக்கூடிய படுக்கை விரிப்புகள், குளிருக்கு போர்த்த உதவும் ஆடைகள், போர்வைகள், மழை கோட்டுகள், குடை உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ் காணப்படும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கலாம்.
வங்கி கணக்கின் பெயர் - Consulate General of Sri Lanka
வங்கி கணக்கு எண் - 177508020001
ஐபிஏஎன் எண்(IBAN no.) - AE600030000177508020001
வங்கியின் பெயர் - ADCB