பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா, யு.எஸ். இணைந்து செயல்படும்: மோடி- டிரம்ப் கூட்டறிக்கை
வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா அதிபராக டிரம்ப்பை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசினார்.
ஆலோசனை
இச்சந்திப்பின் போது இருதரப்பு தொழில் வளர்ச்சி, சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இருதலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
மோடிக்கு பாராட்டு
அப்போது பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். மேலும் பொருளாதார ரீதியாக மோடி சிறப்பாக செயல்படுகிறார்; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தந்ததில் பெருமிதம் கொள்வதாகவும் டிரம்ப் கூறினார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக
இச்சந்திப்புகளைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருவரின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இருநாடுகளும் வளர்ச்சியின் உந்துசக்தியாக திகழ்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும்.
பசிபிக் பகுதியில் அமைதி
இந்திய பசிபிக் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதுதான் இருநாடுகளின் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டார்.