சிங்கப்பூர் துணை பிரதமர் சண்முகரத்தினம், இஸ்ரேல் அதிபருடன் மோடி சந்திப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூர் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு துணைப் பிரதமர், இஸ்ரேல் அதிபர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் நிறுவன பிரதமர் லீ குவான் யூ இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவர் சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது லீ குவான் யூ வகுத்த பாதையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் தயாராக இருப்பதாக தெரிவித்தார் சண்முகரத்தினம்.
லீ குவான் யூவின் சேவைகளுக்கு மோடி புகழாரம் சூட்டினார். மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம், தூய்மை ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்வதாகவும், அதற்கு லீ குவான் யூதான் காரணம் என்றும் மோடி புகழாரம் சூட்டினார்.
அதன் பின்னர் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் கோ சோக் டாங் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் அதிபர்
இதேபோல இஸ்ரேல் அதிபர் ரூவின் ரிவ்லின், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் இரு நாட்டு ஒத்துழைப்பு, கூட்டுச் செயல்பாடு குறித்துப் பேசினர்.