ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று சந்தித்தார்.
இதனிடையே பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று மெக்சிகோ, வியட்நாம் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிலையில் ஜி20 மாநாடு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
முன்னதாக இஸ்ரேலில் 3 நாட்கள் பயணம் செய்தார் பிரதமர் மோடி. இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவானதையொட்டி அதன் நினைவாக மோடி இந்த பயணத்தை மேற்கொண்டார். இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.