சார்க் மாநாடு: ஒரே மேடையில் இருந்தாலும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளாத மோடி- நவாஸ் ஷெரீப்!!
காத்மாண்டு: தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தாலும் இருவரும் ஒருவார்த்தை கூட பேசாமல் நேருக்கு நேர் பார்ப்பதைக் கூட தவிர்த்திருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டுத் தலைநகரான காத்மாண்டுவில் சார்க் என்னும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் இடையே இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் நிலவியது.
இந்த நிலையில்தான் சார்க் மாநாடு நேற்று தொடங்கியது. இம் மாநாட்டில், ஒரே மேடையில் மோடியும், நவாஸ் ஷெரீப்பும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே மாலத்தீவு மற்றும் நேபாள தலைவர்கள் இருந்தனர்.
ஒரே மேடையில் அமர்ந்திருந்தபோதும் நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் கை குலுக்கிக்கொள்ளவில்லை. ஏன் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதைகூட தெரிவித்துக் கொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவும் இல்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன், நமது பிரதமருக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த முறைப்படி திட்டமிடவில்லை. அது தொடர்பாக நமக்கு பாகிஸ்தானிடமிருந்து வேண்டுகோள் எதுவும் வரவில்லை என்றார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பைத் தவிர இதர நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.