5 தமிழக மீனவர் தூக்கை ரத்து செய்த ராஜபக்சேவுக்கு மோடி நேரில் நன்றி!
காத்மாண்டு: 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி நேரில் நன்றி தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அனைவர் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர் விடுதலை குறித்து பேசினார்.
பின்னர் இந்திய தூதரகம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் 5 தமிழக மீனவர்களும் தமிழகம் திரும்பினர்.
இந்நிலையில் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சார்க் நாடுகளின் மாநாடு இன்று தொடங்கியது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூட்டான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய மாநாட்டின் ஒருபகுதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது 5 தமிழக மீனவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்காக ராஜபக்சேவுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.