ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர சிரியா கிளம்ப முயன்ற 4 பேர் பிரான்ஸில் கைது
பாரீஸ்: பிரான்ஸில் ஜிஹாத் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 17 பேர் பலியாகினர். இதையடுத்து நாட்டில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு பிரான்ஸில் உள்ள லுனெல் நகரில் வசிக்கும் 10 பேர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து போராட கிளம்ப உள்ளனர் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த நகரில் தீவிர சோதனை நடத்தி ஜிஹாத் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக லுனெல் நகரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தனர். அதில் பெரும்பாலானோர் சிரியா அல்லது ஈராக்கில் போரிடும்போது பலியாகியுள்ளனர்.
பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கிய குவாச்சி சகோதரர்களில் சயிப் ஏமனுக்கு சென்று அல் கொய்தாவிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பியவர். செரிப் குவாச்சி ஜிஹாத் அமைப்பில் இருந்தவர். சிரியாவுக்கு செல்ல முயன்றபோது கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.