பின்லாந்தில் பரபரப்பு.. பொதுமக்கள் மீது மர்ம நபர் சரமாரி கத்தி குத்து.. 2 பேர் பலி, பலர் காயம்
ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
தலைநகர் ஹெல்சின்கியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலுள்ள துர்கு நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரிய அளவிலான வெள்ளை நிற கத்தியை வைத்துக்கொண்டு ஒரு நபர் சரமாரியாக மக்களை குத்தியதாக கண்ணால் கண்டவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து மக்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, கத்தியோடு ஓடிய நபர் காலை நோக்கி சுட்டனர். காலில் குண்டு பாய்ந்து அந்த நபர் விழுந்தார்.
மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர் சரமாரியாக கத்தியால் குத்தியதால், துர்கு நகரின் மைய பகுதியில் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இது தீவிரவாத செயலா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.