ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம்... சுனாமிக்கு வாய்ப்பில்லை!
டோக்கியோ: ஜப்பான் மற்றும் கிழக்கு தைவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமோ சுனாமிக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகளில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
முக்கியமாக தைவான் அருகில் இருக்கும் தெற்கு ஒகினாவாவில் உள்ள தொடர் தீவுகளில் சிறிய அளவிலான சுனாமி தாக்கக்கூடும் என ஜப்பான் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளாது.
ஆனால் சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள துறைமுக பகுதியில் கடல் மட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும், கடல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.