பயணிகள் முன்னிலையில் இந்திய பஸ் டிரைவர் எரித்துக் கொலை... ஆஸி.யில் பயங்கரம்
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணி ஒருவரால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேயில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவரை, பயணிகள் முன்னிலையில் ஒருவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வந்தவர் 29 வயதான மன்மீத் அலீஷீர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பஞ்சாபைச் சேர்ந்த பாடகர் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வழக்கம் போல் பணிக்குச் சென்ற மன்மீத் மீது, திடீரென பெட்ரோல் போன்ற எண்ணெய்யை ஊற்றினார் 48 வயது நபர் ஒருவர். மேலும் மன்மீத் சுதாரிப்பதற்கு முன் அவர் மீது தீக்குச்சியை கொளுத்திப் போட்டார். இதில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே மன்மீத் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்துக்குள் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்து தீப்பிடிப்பதற்கு முன்னதாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மன்மீத்தை கொடூரமாக எரித்துக் கொன்ற அந்த நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எதனால் அவர் இப்படிப்பட்ட வெறிச்செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.