நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர்... சென்னையின் ராஜ ராஜேஸ்வரி!
வாஷிங்டன்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி என்பவர் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவர் ராஜ ராஜேஸ்வரி. தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, கடந்த 16 வருடங்களாக ரிச்மாண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜ ராஜேஸ்வரியை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி பொறுப்பேற்றார்.
நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றது குறித்து ராஜ ராஜேஸ்வரி கூறுகையில், ‘இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த எனக்கு, இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்றுள்ள ராஜேஸ்வரி பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.