அமெரிக்காவில் ரஜினி பங்கேற்ற தாமரை கோவில் குரு சச்சிதானந்தா பொன் விழா!
யோகவில்(யு.எஸ்): தன்னுடைய குரு சச்சிதானந்தா, அமெரிக்காவில் உருவாக்கிய தாமரை
கோவில் 30ம் ஆண்டு விழாவில் ரஜினி பங்கேற்றுள்ளார். சச்சிதானந்த சுவாமிகள் அமெரிக்கா வந்து ஐம்பதாண்டுகள் ஆனதையொட்டியும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும் விழாவில் கலந்து கொண்டு தமிழ்முறைப் படி வழிபாடுகள் செய்தார்.
யோகவில் நகரம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டியில் இருந்த சுவாமி சச்சிதானந்தாவை, பீட்டர் மேக்ஸ் என்ற பிரபல கலைஞர் அமெரிக்காவுக்கு அழைத்து வந்தார். ஆசிரமம் அமைத்து அமெரிக்காவில் ஒருங்கிணைந்த யோகாவை அறிமுகப்படுத்தினார். அந்த காலத்தில் அமெரிக்காவில் 'ஹிப்பிகள்' என்றழைக்கப்பட்டவர்கள் சச்சிதானந்தாவினாவில் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள். மது போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட்டு சீடர்களாகவும் மாறினர்.
பல்சமய வழிபாட்டுக் கோவிலாக விளங்கும் தாமரை கோவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது. ஆசிரமம் மற்றும் கோவில் அமைந்த பகுதி 'யோகவில்' என்ற நகரமே உருவாகும் அளவுக்கு விரிவடைந்ததுள்ளது.
வர்ஜீனியா மாநிலத்தின் தென் பகுதியில் சார்லட்ஸ்வில் நகருக்கு அருகில் ஜேம்ஸ் நதிக்கரையில் யோகவில் நகரம் அமைந்துள்ளது.
பேரூர் ஆதினத்திற்கு சிறப்பு அழைப்பு
சுவாமி சச்சிதானந்தாவின் குடும்பத்தினர் பேரூர் ஆதினத்தின் தீவிரப் பற்றாளர்கள். யோகவில் ஆசிரமத்தின் ஒவ்வொரு முக்கிய விழாக்களுக்கும் பேரூர் ஆதினத்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. சுவாமி சச்சிதானந்தா, தன்னுடைய இறுதிச் சடங்குகளை தமிழ்முறைப்படி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கு இணங்க மருதால அடிகளார் வந்திருந்து அவ்வாறே செய்துள்ளார். உடன் ரஜினியும் வந்திருந்து மூன்று நாட்கள் கழித்து மொட்டை அடித்து, குருவுக்கு சடங்குகள் செய்தார்.
தற்போது ஒருங்கிணைந்த யோகாவின் ஐம்பதாண்டு , தாமரைக் கோவில் 30ம் ஆண்டு விழாவுக்கும் மருதால அடிகளார் வந்துள்ளார். ஜுலை 15ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், மூன்றாம் நாள் பல்சமய வழிபாட்டில் ரஜினி கலந்து கொண்டார்.
'அம்மா என்றழைக்காத'வை நினைவு கூர்ந்த ரஜினி...
ரஜினிக்கும் மருதாசல அடிகளாருக்கும் , சுவாமி சச்சிதானந்தாவின் இறுதி காலத்திலிருந்தே நல்ல நட்பு உண்டு. மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘அம்மா என்ற அழைக்காத' பாடல் பேரூர் ஆதினத்திற்குட்பட்ட கோவிலில் தான் படமாக்கப்பட்டது. அந்த கோவிலைப் பற்றி கேட்ட ரஜினி, பாடல் படமாக்கப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்துள்ளார். மீண்டும் அந்த ஆலயத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். அடிகளாரும் அழைப்பு விடுத்துள்ளார்.
கபாலி பட வெளியீட்டுக்கு முன்னதாகவே சென்னை திரும்புவதாக கூறப்பட்ட நிலையில், தன்னுடைய குருவின் ஆலய மற்றும் யோகா விழாக்களை முன்னிட்டே, பயண தேதியை ரஜினி மாற்றிக்கொண்டார் என்று கருதப்படுகிறது.