பாக். சார்க் மாநாட்டில் ராஜ்நாத்சிங் உரையை கவர் செய்ய மீடியாக்களுக்கு அனுமதியில்லை! இந்தியா ஷாக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும், சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையை கவர் செய்ய மீடியாக்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இது இந்திய தரப்பை அவமானப்படுத்துவதை போல உள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்க ராஜ்நாத்சிங் இஸ்லாமாபாத் சென்றுள்ள நிலையில், அங்கு சில வலதுசாரி அமைப்பினர் அவரது வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இன்று காலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. துவக்க விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகானும் உரையாற்றினார். இவர்கள் உரைகளின்போது செய்தி சேகரிக்க உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ராஜ்நாத்சிங் பேசுகையில், மீடியாக்கள் வெளியேற்றப்பட்டனர். ராஜ்நாத்சிங் தனது உரையில், தீவிரவாதிகள் மீது மட்டும் கடுமையான நடவடிக்கை எடுப்பது முக்கியம் அல்ல, தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் அமைப்புகள், தனிநபர்கள், நாடுகள் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை வலுவாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என பிரித்து பார்க்க தேவையில்லை. தீவிரவாதம் தீவிரவாதம் தான் என்றார்.
இதனிடையே மீடியாக்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு எதிராக இழைக்கப்பட்ட அவமானம் என சலசலப்பு உருவாகியுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா இதுகுறித்து விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் அந்த நாட்டுக்கு எதிராகவே இந்திய உள்துறை அமைச்சர் மறைமுக தாக்குதல் நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல்தான் மீடியாக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.