செப்டம்பர் 27ல் ”ரத்த சிவப்பு நிலா” - ஆனால் உலகமெல்லாம் அழியாது, போய் வேலையைப் பாருங்க பாஸ்!
நியூயார்க் : ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர்.
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சிலர் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் "ரத்த சிவப்பு" நிலாவின்போது விண்கற்கள் பூமி மீது விழும் என நம்புகின்றனர்.
"மோர்மோன்" சர்ச் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களில் பலர் அழிவின்போது தேவைப்படும் என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர்.
மூன்று முறை ரத்த நிலா:
கடந்த 2014 ஏப்ரல் 15, அக்டோபர் 8, 2015 ஏப்ரல் 14 ஆகிய மூன்று முறை "ரத்த நிலா" தோன்றியது. தொடர்ந்து 4வது முறையாக 28ல் வருகிறது. இப்படி நான்கு முறை ரத்த நிலா ஏற்பட்டால், உலகம் அழிவை சந்திக்கும் என பைபிள் உள்ளிட்ட பலவற்றை மேற்கோள்காட்டி அழிவை நம்புபவர்கள், பீதியை கிளப்புகின்றனர்.
சந்திர கிரகணமும் வருகிறது:
ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன் ஏற்படுவது வழக்கம். இந்தாண்டு சிறப்பம்சம் என்னவெனில் அன்று தான் சந்திர கிரகணம் வருகிறது. சூப்பர் மூனின் போது சந்திர கிரகணமும் வருவதால் ரத்த நிலா ஏற்படுகிறது. அதாவது நிலா ரத்த நிறத்தில் காட்சி அளிக்கும்.
பெரியதாக தெரியும் நிலா:
"சூப்பர் மூன்" என்பது, முழு நிலவு அல்லது புது நிலவு என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான துாரம், சராசரி தொலைவை விட குறைவாக இருக்கும். இச்சமயத்தில் நிலா 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.
சூப்பர் மூன்நிகழும் ஒவ்வொரு முறையும் நிலவின் அளவு வேறுபடும்.
முழு நிலவும், கிரகணமும்:
நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது.இதனால் சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்துவிடுகிறது. பூமியின் நிழல் தான் நிலவில் படுகிறது. முழு நிலவன்று மட்டுமே சந்திரகிரகணம் ஏற்படும்.
ரத்த நிலா:
சந்திர கிரகணத்தன்று சூப்பர் மூன் வருவதால் நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் "ரத்த நிலா" என அழைக்கப் படுகிறது.
எங்கெல்லாம் தெரியும்:
சூரிய கிரகணத்தைக் காணும்போது அணிவது போல், இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை. வட ,தென் அமெரிக்கக் கண்டங்களிலும் , ஐரோப்பிய ஆப்ரிக்க நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியும். இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
டெட்ராட் என்றால் என்ன:
நான்கு ரத்த நிலாக்கள் குறுகிய காலத்தில் வருவதற்கு "டெட்ராட்" என நாசா பெயர் வைத்துள்ளது. "டெட்ராட்" ஏற்படுவது அரிதான நிகழ்வு. கி.பி.,1லிருந்து 55 முறை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ரத்த நிலா தோன்ற இருப்பதால், பூமி மீது சிறுகோள்கள் தாக்கும் என்கின்றனர்.
நாசா மறுப்பு:
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா, அடுத்த பல நுாற்றாண்டுகளுக்கு எந்த விதமான சிறுகோள்கள், விண்கற்களும் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. விண்கற்களால் தாக்குதல் ஏற்படுமா என அதிநவீன கருவிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பூமி பாதுகாப்பாக இருக்கும். தற்போதைக்கு உலகிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளது.