அமெரிக்காவுக்கு புடினை விட ஒபாமாவால்தான் அதிக ஆபத்தாம்... இதெப்படி இருக்கு!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை விட அதிபர் பராக் ஒபாமாவால்தான் அதிக ஆபத்து என்று அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர், சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் ஆகியோரை விட அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் ஒபாமா என்றும் அவர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ், இப்சாஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில்தான் இந்த முடிவு தெரிய வந்து அதிர வைத்துள்ளது. மொத்தம் 2809 அமெரிக்கர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
யாரால், எந்த அமைப்பால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதே அக்கேள்வியாகும். இதற்கு 1 முதல் 5 வரை மார்க் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. 1 என்றால் ஆபத்தே இல்லை. 5 என்றால் அபாயகரம் என்று அர்த்தம்.
இதில் 34 சதவீதம் பேர் ஒபாமாதான் அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமானவர் என்று வாக்களித்து அதிர வைத்துள்ளனர். புடினுக்கு 25 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. அஸ்ஸாத்துக்கு 23 சதவீத வாக்குகள் கிடைத்தன.
கடந்த மார்ச் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடந்தது. இதில் 1083 பேர் ஜனநாயகக் கட்சியினர். 1059 பேர் குடியரசுக் கட்சியினர் ஆவர்.
குடியரசுக் கட்சியினரில் 27 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கு ஜனநாயகக் கட்சியால் பேராபத்து என்று கூறியுள்ளனர். அதேசமயம், 22 சதவீத ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரால் ஆபத்து என்று கூறியுள்ளனர்.
எந்தத் தீவிரவாத அமைப்பால் அதிக அபாயம் உள்ளது என்ற கேள்விக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 58 சதவீதம் பேர் பேராபத்து என்று கூறியுள்ளனர். அல் கொய்தா அமைப்புக்கு 43 சதவீதம் பேரும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 34 சதவீதம் பேரும், ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு 27 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.