மாலத்தீவு மக்களுக்கு குடிநீர்- இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கிய சீனா!!
மாலத்தீவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 3-ல் ஒரு பங்கு பேர் தலைநகர் மாலேயில் தான் வாழ்ந்து வருகின்றனர். அங்கு கடந்த வாரம் குடிநீர் சுத்தகரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தில் மிகப் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவிடம் மாலத்தீவு உதவி கோரியது. இதனை ஏற்று இந்தியாவும் உடனடியாக விமானங்கள் மற்றும் கப்பல் மூலம் குடிநீரை மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் உள்ள ஐ.நா. அலுவலகமும் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது குடிநீர் சுத்தரிகரிப்பு ஆலை மறுசீரமைப்பு பணி போர்க்கால அடிப்படையில் வேகமாக நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆலை சேதமடைந்துள்ளது. எனினும், தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக சீரமைத்து உற்பத்தியை துவங்க இன்னும் 10 நாட்கள் ஆகும் என அந்நாட்டு அதிபரின் செய்தித்தொடர்பாளர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இதனால் மாலே நகரில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் குடிநீர் விநியோகத்தில் குதித்துள்ளது. மொத்தம் 65 டன் குடிநீரை விநியோகம் செய்ய சீனாவும் முன்வந்துள்ளது.
மாலேவுக்கு சீனா நேற்று விமானம் மூலம் 40 டன் குடிநீரை அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் குடிநீர் சுத்திகரிப்பு லையத்தை சீரமைக்க 5 லட்சம் டாலரையும் நிதி உதவியாக சீனா வழங்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் இந்தியாவுக்கு போட்டியாக சீனா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.