சிரியாவில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் வெல்லாமல் போனால் பேரழிவுதான்.... அதிபர் ஆசாத் அச்சம்
டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் வெல்ல வேண்டும்; அப்படி வெற்றி பெறாவிட்டால் மத்திய கிழக்கு ஆசியா பிராந்தியமே பேரழிவைச் சந்திக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஆசாத் அச்சம் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இக்குழு அல்லாமல் அல் நூஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவின் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
துருக்கி எல்லையில் சிரியா குர்துகளும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சிரியா விவகாரத்தில் புதிய திருப்பமாக கடந்த வாரம் ரஷ்யா, சிரியா அதிபர் ஆசாத் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக களத்தில் குதித்தது. அதிபர் ஆசாத்துக்கு எதிரான அனைத்து கிளர்ச்சியாளர்களளயும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த வான்வழித் தாக்குதல்கள் , அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுவான ப்ரீ சிரியா ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்கள் மீதுதான் நடத்தப்பட்டது. இதனால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது. அமெரிக்கா அதிபர் ஒபாமா, வெளிப்படையாகவே ரஷ்யாவின் இந்த தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் சிரியாவின் டார்டஸில் 1971ஆம் ஆண்டே ரஷ்யா கடற்படை தளம் அமைத்துவிட்டது. தற்போதைய அதிபர் ஆசாத்தின் தந்தைதான் இதற்கு வழிவகுத்திருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இந்த கடற்படை தளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ரஷ்யா, போரில் குதித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சிரியா பொதுமக்களும் கூட, ரஷ்யாவின் இந்த தலையீட்டால் நிச்சயம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வருகின்றனர். இந்த பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யாவின் இந்த தாக்குதல் நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சிரியாவில் ரஷ்யாவின் தலையீடு வெல்ல வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு ஆசியாவையே காப்பாற்ற முடியும். இல்லையெனில் இப்பிராந்தியமே பேரழிவைத்தான் சந்திக்க வேண்டும்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதலால் பயங்கரவாதம் ஒடுக்கப்படவில்லை. மாறாக அது வலுவடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை சிரியா அதிபர் வெளிப்படையாக வரவேற்றிருப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படுகிறது. இதனால் சிரியா பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ரஷ்யா மீது இங்கிலாந்து காட்டம்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் கேமரூன், உலகம் மிகப் பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது.. அதற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.
தற்போது ரஷ்யாவின் இந்த தலையீடு மிக மோசமான தவறு. அந்த பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கே ரஷ்யா வழிவகுத்திருக்கிறது. சிரியாவில் இங்கிலாந்து ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.