ரஷ்யா நெருப்போடு விளையாடிக்கொண்டுள்ளது: துருக்கி அதிபர் எச்சரிக்கை
இஸ்தான்புல்: துருக்கி நாட்டு குடிமக்களை அவமரியாதை செய்யும்விதமாக நடந்துகொள்வதன் மூலம், ரஷ்யா நெருப்போடு விளையாடிக்கொண்டுள்ளது என்று துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் எச்சரித்துள்ளார்.
சிரியா எல்லையில் வைத்து, ரஷ்ய போர் விமானத்தை சமீபத்தில் துருக்கி சுட்டு வீழ்த்தியது. இதனால் ரஷ்யா-துருக்கி நாடுகளின் உறவில் விரிசல் விழுந்துள்ளது. துருக்கியுடனான விசா விதிமுறையை கடுமையாக்கியுள்ள ரஷ்யா, துருக்கியில் வசிக்கும், தனது நாட்டை சேர்ந்த 9 ஆயிரம் மக்களை, அடுத்த மாத இறுதிக்குள், தாயகம் திரும்புமாறு அழைத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் துருக்கியை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். இதை மனதில் கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய துருக்கி அதிபர், எர்டோகன் "துருக்கி மக்களை தவறாக நடத்துவது என்பது ரஷ்யா நெருப்போடு விளையாடுவதற்கு சமம். ரஷ்யாவுடன் நல்ல உறவை துருக்கி பேணி வந்துள்ளது. அதை கெட்டுப்போய்விட கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்" என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
துருக்கி, ஐரோப்பிய, அமெரிக்க ராணுவம் இணைந்த நேட்டோ படையுடன் துருக்கியும் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.