கொல்லப்பட்ட விமானியின் உடலை வைத்து ஆனந்த கூத்தாடிய தீவிரவாதிகள் பகுதியில் ரஷ்யா உக்கிர தாக்குதல்!!
டமாஸ்கஸ்: போர் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த விமானியை சுட்டுப் படுகொலை செய்து அந்த உடலை வைத்து வெறித்தனமாக ஆனந்த கூத்தாடிய துருக்கி ஆதரவு தீவிரவாதிகள் பகுதியில் ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
சிரியா- துருக்கி எல்லையில் ரஷ்யாவின் போர் விமானத்தை தங்களது நாட்டுக்குள் ஊடுருவியதாக கூறி துருக்கி சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் பாராசூட்டின் உதவியுடன் கீழே குதித்தனர்.
அப்போது சிரியா பகுதியில் உள்ள அமெரிக்கா, துருக்கி ஆதரவு தீவிரவாதிகளான ப்ரீ சிரியா ஆர்மி இயக்கத்தினர் விமானிகளையும் தரையில் இருந்து சுட்டனர். இதில் ஒரு விமானி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனந்த கூத்தாட்டம்
அந்த விமானியின் உடலை வைத்துக் கொண்டு அல்லாஹூ அக்பர் என முழக்கங்களை எழுப்பியவாறு தீவிரவாதிகள் உற்சாகமாக கொண்டாடும் வீடியோ காட்சிகளும் வெளியாகி இருந்தது. அதில் விமானியின் உடலை எங்கே எரிப்பது என்றும் தீவிரவாதிகள் விவாதிப்பதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் ரஷ்யாவை கடுமையாக ஆத்திரமூட்டியுள்ளது.
உயிருடன் விமானி மீட்பு
மற்றொரு விமானி படுகாயங்களுடன் வனப்பகுதி ஒன்றில் விழுந்தார். படுகாயங்களுடன் தீவிரவாதிகளின் பதுங்கியிருந்த அந்த விமானி, ரஷ்யா- சிரியா ராணுவத்தின் 12 மணிநேர தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.
பயங்கர பதிலடி
இந்த படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் சிரியாவில் கூடுதல் ராணுவ தளவாடங்களை களமிறக்கியுள்ளது. 250 மைல் தொலைவில் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடிய விமானங்களை வீழ்த்தும் அதிநவீன ஏவுகணைகளையும் ரஷ்யா களத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
தீவிரவாதிகளின் பகுதிகள் மீது ரஷ்யா தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தியது. 12 முறை கொத்து கொத்தாக குண்டுகளை தீவிரவாதிகளின் பகுதிகள் மீது ரஷ்யா விமானங்கள் சரமாரியாக வீசின.
போக்கப்பலில் இருந்தும் தாக்குதல்
இந்த தாக்குதலை பயன்படுத்தி சிரியா ராணுவமும் தீவிரவாதிகள் நிலைகள் மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. காஸ்பியன் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு போர்க் கப்பல்களில் இருந்தும் அலெப்போ, இட்லிப், ரக்கா நகரங்கள் மீதும் உக்கிரமான ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
மாஸ்கோவில் போராட்டம்
இதனிடையே ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் துருக்கி தூதரகம் முன்பாக மிகப் பெரும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. துருக்கி தூதரகம் மீது அழுகிய முட்டைகளும் தக்காளிகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.